கரூர்,ஜன.11: ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி தவற விட்ட பணப் பையை எடுத்து ஒப்படைத்த டிரைவருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.
கரூர் அருகே வெள்ளியணையில் வசிப்பவர் காத்தமுத்து(68). ஓய்வுபெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர். தற்போது கரூர் தாந்தோணிமலை தென்றல் நகரில் உள்ளார். நேற்று இருசக்கர வாகனத்தில் வெள்ளியணையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வந்தபோது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ரூ.7,594 பணம் மற்றும் அடையாள அட்டை, ஏடிஎம், ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு ஆகியவைகளை வைத்திருந்த பையை தவற விட்டு விட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி ஓட்டுனர் முருகானந்தம்(39) என்பவர் சாலையில் பை கிடப்பதை கண்டு அதனை எடுத்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் இதுகுறித்து விசாரணை நடத்தி உடனே பையை காத்தமுத்துவிடம் ஒப்படைத்தார். முருகானந்தத்தின் இந்த செயலை கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் பாராட்டினார்.