குளித்தலை, ஜன.11: மகாதானபுரம் விஸ்வநாதசாமி கோயில் நிலம் குத்தகை சீட்டு வழங்க விவசாயிகளை இழுத்தடிக்கும் செயல் அலுவலருக்கு எதிராக நடக்க இருந்த போராட்டம் அமைதி பேச்சால் ஒத்திவைக்கப்பட்டது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம், விஸ்வநாதசாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை தொகை ரசீது வழங்குவதற்கு தாமதப்படுத்தும் கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் செயல் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவித்து துண்டு பிரசுரம் வெளியிட்டது. இதைதொடர்பாக குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று அமைதிப்பேச்சு வார்த்தை ஆர்டிஓ லியாகத் தலைமையில் நடைபெற்றது.
இதில் சம்மந்தப்பட்ட நிலத்திற்கான நிலவரியை கிராம நிர்வாகத்திடம் வசூல் செய்ய வேண்டும். அனுபவம் மற்றும் சாகுபடி செய்துள்ள நிலத்தின் நிலவரியை விஏஓ பட்டாவில் உள்ளவாறு கோயில் நிர்வாகத்திடம் வசூல் செய்ய வேண்டும். சாகுபடி செய்துள்ள நிலத்திற்கான அனுபவ சான்றினை பெற்று சம்பந்தப்பட்ட அனுபவதாரர்கள் இந்து அறநிலையத்துறைக்கு மனு செய்து கொள்ள வேண்டும். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நில அனுபவதாரர்களிடம் பெற்ற மனுக்களின் மீது உடனே நடவடிக்கை மேற்கொண்டு குத்தகை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
தரிசாக அல்லது சாகுபடி செய்த நிலத்திற்கு அனுபவம் ஏற்கனவே செய்துள்ளார்களா என்பதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி செய்து குத்தகை வழங்க தகுதி அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது குத்தகை அனுபவதாரர்கள் நிலத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை தற்போது யாரும் வெட்டாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். இதுத்தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படுத்தக்கூடாது. விண்ணப்பம் வழங்கும் அனுபவதாரர்கள் மீது மரங்களை அகற்றுவது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அதன் நகலை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் நேற்று நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.