அவிநாசி,ஜன.11: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அவிநாசியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசினார்.மக்களிடம் செல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் திமுக சார்பில் பொது மக்களை சந்திக்கும் ஊராட்சி கிராம சபைக்கூட்டங்கள் நேற்று அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி உள்ளிட்ட பல ஊராட்சிகளில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா., மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, கிராமமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் தரப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை மற்றும் குடிநீர்வசதி, சாக்கடை வசதி உள்ளீட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் தமிழக அரசுக்கு பலமுறை விண்ணப்பித்தும் உதவி தொகைகள் வழங்கப்படவில்லை. என்று குற்றம் சாட்டினர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியதாவது: மக்களிடத்தில் அடுத்த ஆட்சி திமுக ஆட்சிதான் என்ற ஆழமான நம்பிக்கை வந்துள்ளது. மூன்று மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இதில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சிக்கு வரும். மக்கள் கொடுத்துள்ள இந்த கோரிக்கை மனுக்களை உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கொண்டு செல்வோம். பிரச்னைகளை தீர்த்து வைப்போம்.தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.