×

காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை கோவையில் துவக்கம்

கோவை, ஜன.11: கோவை நகர், புறநகர் போலீசில் முன் நடத்தை சரிபார்ப்பு என்ற திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள்  மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.in என்ற வெப்சைட்டில்  போலீஸ் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்பு ெகாள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தனி நபர்  விவரம், வேலை தொடர்பான சரிபார்ப்பு, வாடகைதாரர் விவரம், வீட்டு வேலையாட்கள்  விவரங்கள் இதில் காண முடியும். இந்த சேவைக்காக தனி நபர் விண்ணப்பித்திற்கு  500 ரூபாய், தனியார் நிறுவனங்களுக்கு 1100 ரூபாய் செலுத்தவேண்டும்.  கிரடிட், டெபிட் கார்டு மூலமாக இந்த முறையை பயன்படுத்தலாம்.  தனி நபர்  வீட்டு முகவரி, போலீசில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் சோதிக்கப்பட்டு அவர்  எதாவது குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ளாரா என தெரிந்து கொள்ள முடியும்.  விண்ணப்பித்த 15 நாளில் போலீசில் முன் நடத்தை சரிபார்ப்பு விவரம் பெறலாம்.  இதற்காக பொதுமக்கள், நிறுவனங்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்லவேண்டிய அவசியமில்லை.  போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை பெற, வெப்சைட்டில் விண்ணப்பித்து அதற்கான  அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம்.

 போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையை கியூ ஆர்  குறியீட்டை ஸ்கேன் செய்து, சரிபார்ப்பு என்ற பகுதியில் நம்பகத்தன்மையை  சரிபார்க்கலாம். பி.வி.ஆர் என்ற எண்ணை பயன்படுத்தி வெப்சைட்டில்  விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.  பி.வி.ஆர்  திட்டம் கோவை மாநகர போலீசில் கமிஷனர் சுமித்சரண் நேற்று துவக்கினார்.  ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தனது நிறுவன தகவல்களை போலீஸ் வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார். துவக்க விழாவில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் பங்கேற்றார்.
கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையை தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா நேற்று துவக்கி வைத்தார். இதில் கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை