ஈரோடு, ஜன. 11: நெற்பயிரைத் தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க முன்கூட்டியே மருந்துகள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்குமாறு வேளாண் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெற்பயிரைத் தாக்கும் நோய்கள் பெரும்பாலும் காற்று, பாசனநீர், விதைகள் ஆகியவற்றின் மூலமே பரவுகின்றன. இதில் எச்சரிக்கையாக விதை மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்க முன்கூட்டியே விதை நோ்த்தி செய்ய வேண்டும். விதை நோ்த்தி செய்வதால் விதை அழுகல், வோ் அழுகல், நாற்று அழுகல், குலைநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து 40 நாட்கள் வரை பயிருக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. முளைப்புதிறன் மேம்படுகிறது. போதுமான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக விளைச்சல் கிடைக்கிறது. விதைகளின் மீது பரவி இருக்கும் பூஞ்சான வித்துக்களை நீக்குவதாலும், விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே மண் மூலம் பரவும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து விதைகளை பாதுகாப்பதாலும் செழிப்பான, நோயற்ற பயிர்களை பெறலாம். விதை நோ்த்தி செய்வதற்கு ரசாயன மருந்துகள் தவிர நன்மை செய்யும் பூஞ்சானங்களும், நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உயிரியில் மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன.