புதுச்சேரி, ஜன. 11: புதுவை, முதலியார்பேட்டை, அப்துல் கலாம் நகர், குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ராஜாராம். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர், சாரம், சத்யா நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி விமலா என்பவரிடம் ரூ.1 லட்சம் மாதாந்திர ஏலச்சீட்டு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீட்டு ஏலம் எடுத்த பிறகும் ரூ.1 லட்சத்தை விமலா தரப்பினர், ராஜாராமிடம் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்தார்களாம். இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து 5 வருடங்களுக்குபின் தற்போது காவலர் புகார் விசாரணைக் குழுவிடம் ராஜாராமன் முறையிட்டார். இதையடுத்து இக்குழுவின் உத்தரவுக்கிணங்க உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான போலீசார் மோசடி பிரிவில் விமலா மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.