திண்டுக்கல், ஜன. 10: தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 2வது நாளாக வேலைநிறுத்தம் நடந்தது. சாலைமறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது செய்யப்பட்டனர்.தொழிலாளர் விரத போக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2வது நாளாக நேற்று வேலைநிறுத்தம், சாலைமறியல் போராட்டங்கள் நடந்தது.*திண்டுக்கல்லில் எல்பிஎப் மாநில தலைவர் பஷீர்அகமது தலைமையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்பிஎப் மாவட்ட தலைவர் அழகர்சாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் கணேசன், சிபிஎம் மாநிலக்குழு பாண்டி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மணிக்கூண்டில் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர். மாநகராட்சி அலுவலகம் அருகே வந்தபோது போலீசார் தடுத்து 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.