சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி உயர் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான பணிகள் பகல் நேரத்தில் நடைபெறும். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட பகுதியின் உதவி பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்வார்கள். ஆய்வு தொடர்பாகவும், பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது தொடர்பாகவும் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். இதை தவிர்த்து மக்களின் போக்குவரத்துடன் தொடர்புடைய சாலை பணிகள், நடைபாதை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும். இதைத் தவிர்த்து தி.நகர் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் இரவு நேரத்தில் பணிகள் நடைபெறும்.
இந்நிலையில் இந்த பணிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் இரவு ரோந்து சென்று வருகின்றனர். இரவு 11 மணி முதல் 1 மணி வரை ரோந்து செல்லும் உயர் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள், நடைபாதை பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்கின்றனர்.