×

டி.களத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பாடலூர், ஜன.3: டி.களத்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலுார் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் துறையூர்-திருச்சி சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED செட்டிகுளத்தில் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி சுவாமி திருவீதியுலா