உலமாக்களுக்கு நலவாரிய அட்டை விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, டிச.19: திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உலமாக்கள் மற்றும் இதரபணியாளர்கள் நல வாரிய அட்டைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் (ம) இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இவ்வாரியத்தால் உறுப்பினராக பதிவு செய்து, உலமா அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் தங்கள் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கருச்சிதைவு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. 60 வயது ஆனவுடன் உலமா ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்து உலமா அட்டைகள் பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: