திருச்சி, டிச.19: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ராஜாமணி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் செயலாளர் சண்முகம் தலைமையில் திரண்ட உறுப்பினர்கள் திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, அதவத்தூர், அல்லித்துறை பகுதிக்குட்பட்ட ஏழை, எளிய 251 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல கட்ட போராட்டம் நடைபெற்றது. 2014ல் ரங்கம் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்து ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. அதன்படி 251 பேருக்கு ஒதுக்கி, தயாரான இடத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடத்தை வழங்க வேண்டும். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் இமான்சேகர், வடக்கு மாவட்ட செயலாளர் வைரி மனோகர் ஆகியோர் அளித்த மனுவில், ‘பட்டியல் இனத்தில் உள்ள 7 இனங்களை தேவேந்திரகுல வேளாளர் என குறிப்பிட வேண்டும். அவர்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.