மணப்பாறை, டிச.19: கோமாரி நோய் பாதிப்பு எதிரொலியாக மணப்பாறை மாட்டு சந்தை செயல்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ் பெற்ற மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். கறவை மாடுகள், உழவு மாடுகள், நாட்டுப் பசுக்கள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். இது மட்டுமின்றி செவ்வாய் மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.