தஞ்சை, டிச. 19: கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 3 திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டிப்பது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கோரிய நிவாரணத்தொகை ரூ.15 ஆயிரம் கோடியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை குடிமனை பட்டா வழங்கி செயல்படுத்த வேண்டும். நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் திமுக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சை பனகல் கட்டிடம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரைசந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். கும்பகோணத்தில் நடந்த போராட்டத்தை எம்எல்ஏ அன்பழகன் துவக்கி வைத்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன் முடித்து வைத்தார்.