சேதுபாவாசத்திரம், டிச. 19: சேதுபாவாசத்திரம் பகுதியில் பணிகள் நிறைவடையாத நிலையில் வெளிமாவட்ட மின்ஊழியர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். எனவே எப்போது மின்சாரம் கிடைக்கும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 100க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் இரவு பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். புயல் கரையை கடந்து 33 நாட்களாக வேலை பார்த்தும் இதுவரை 50 சதவீதம் வரை மட்டுமே மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு கிராமங்களில் வேலை 10 சதவீதம் கூட நிறைவடையவில்லை.