கும்பகோணம், டிச. 19: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3வது தலமாக சாரங்கபாணி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டிருந்தது. இதேபோல் நாதன்கோயிலில் உள்ள ஜெகந்நாதபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் ஜெகந்நாதபெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் திருவடி சேவை நேற்று நடந்தது. இதேபோல் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி கோயில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடி ஸ்ரீஅப்பால ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி பரமபதவாசல் வழியாக சுவாமி எழுந்தருளினார். இதேபோல் வரகூர் ஸ்ரீவேங்கடேசபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு விழா நடந்தது.