வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கும்பகோணம், டிச. 19: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3வது தலமாக சாரங்கபாணி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டிருந்தது. இதேபோல் நாதன்கோயிலில் உள்ள ஜெகந்நாதபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் ஜெகந்நாதபெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் திருவடி சேவை நேற்று நடந்தது. இதேபோல் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி கோயில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடி ஸ்ரீஅப்பால ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி பரமபதவாசல் வழியாக சுவாமி எழுந்தருளினார். இதேபோல் வரகூர் ஸ்ரீவேங்கடேசபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு விழா நடந்தது.

இதேபோல் செந்தலை அனந்தபத்மநாப பெருமாள் கோயில், விஷ்ணம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோயில், புதுச்சத்திரம் வேணுகோபாலசுவாமி கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலை அருகே மலையடிப்பட்டி கண்நிறைந்த பெருமாள் கோயிலில் பரமபத வாசல் வழியாக பக்தர்களுடன் சுவாமி எழுந்தருளினார். திருவையாறு அருகே கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோயிலில் கமலவள்ளி தாயார் சமேத அரசாப விமோசனபெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பாபநாசம் சீனிவாச பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோயிலில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், மகர்நோன்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணி கோயில், தெற்கு வீதியில் உள்ள கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கீழவீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோயில் உள்பட 8 கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது.

Related Stories: