தஞ்சை, டிச. 19: விஏஓ பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் நேற்று 2வது நாளாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் வழங்க வேண்டும். விஏஓ பணியிடங்களை மறுசீரமைப்பு செய்து அதிக பணியிடங்களை அறிவிக்க வேண்டும். விஏஓ அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினிவழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் பதவியை மீண்டும் டெக்னிக்போஸ்ட் என்று மாற்றம் செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பு வகிக்கும் காலம் முழுவதும் ஊதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்.