புதுச்சேரி, டிச. 18: புதுவை பல்கலைக்கழகம், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் இஸ்ட் கிரீட்யீல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் முன்னிலையில் பதிவாளர் சசி காந்த தாஸ் மற்றும் பாரீஸ் இஸ்ட் கிரீட்யீல் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு வெளிவிவகாரங்கள் துறை துணைத்தலைவர் லாரண்டு தேவநேட் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறி
கொண்டனர். பின்னர் துணைவேந்தர் குர்மீத் சிங் பேசுகையில், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகத்தோடு புதுவை பல்கலைக்கழகம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பல்வேறு பன்னாட்டு அளவிலான புதிய ஆய்வுகளும், தரமான மாணவர்களும் உருவாக வாய்ப்புள்ளது. இதன் மூலம் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். கலாச்சார மேம்பாட்டுத்திட்டம் மூலம் புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர முடியும் என்றார்.