நெட்டப்பாக்கம், டிச. 18: நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியில் மருத்துவமனைக்கு ெசல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.கரையாம்புத்தூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலனுக்காக இப்பகுதியில் அரசு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரையாம்புத்தூர் மட்டுமின்றி அருகில் உள்ள பனையடிக்குப்பம், வையாபுரி நகர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு, கடுவனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்ைத பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கரையாம்புத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆவதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து வெறும் மண் தரையாக காணப்படுகிறது. இதில் மழைக்காலத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கும் மழைநீர் பல நாட்கள் ஆனாலும் வடிவதில்லை.