தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச.16:  அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக 1.1.2016 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும் 1.1.2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும். மேலும், நிலுவைத் தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான குழுக் காப்பீட்டுச் சந்தாவை மாதம் ரூ.500 ஆக மாற்றி, குழுக் காப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும்.

பணி மாறுதல் வரையறையைத் தளர்த்த வேண்டும். விருப்ப ஓய்வில் செல்லும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யக் கூடாது. ஊதியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 3 வகையிலான விருப்ப ஓய்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். இந்த கோரிக்கையை விளக்கி முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் கோட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். செயலர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: