தஞ்சை, டிச.16: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக 1.1.2016 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும் 1.1.2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும். மேலும், நிலுவைத் தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான குழுக் காப்பீட்டுச் சந்தாவை மாதம் ரூ.500 ஆக மாற்றி, குழுக் காப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும்.