முத்துப்பேட்டை, டிச.16: முத்துப்பேட்டை தெற்குத்தெரு ஒற்றுமை தளம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவச பொது மருத்துவ முகாம் மதியழங்காரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனித உரிமை ஆர்வலர் பசீர் அகம்மது தலைமை வகித்தார். ஜமாத் நிர்வாகிகள் முகம்மது அனிபா, ஹாஜா அலாவுதீன், குவைத் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர்கள் குருநாதன், செந்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கினர். இதில் 300பேர் மருத்துவ உதவி பெற்றனர். அதனை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும்
வழங்கப்பட்டது.