சிதம்பரம், டிச. 16: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமை வகித்தார். சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அசோக்ராஜ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர்கள் குமார், செல்வநாயகம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கவிதா, கார்த்திக், தீயணைப்பு துறை ஷகில் முபாரக், ஆலய பாதுகாப்பு குழுத்தலைவர் செங்குட்டுவன், நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நடராஜமூர்த்தி தீட்சிதர், நவதாண்டவ தீட்சிதர், வர்த்தகர் சங்க தலைவர் செங்குட்டுவன்,
தில்லை திருமுறை மன்ற தலைவர் முருகையன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அன்பழகன், பக்தர் பேரவை பாலசுந்தரம் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
ஆருத்ரா திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது, நான்கு வீதிகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தமாக வைத்து கொள்வது, வரும் 22, 23ம் தேதிகளில் கோயில் அருகே தீயணைப்பு வாகனம், நடமாடும் மருத்துவ ஊர்தி ஆகியவை தயாராக வைத்து கொள்வது, தேர், தரிசன விழா இரு நாட்களிலும் அதிகளவில் பக்தர்கள் கூடுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.மேலும் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. வரும் 23ம்தேதி தரிசனத்தன்று கோயில் உள்ளே பக்தர்கள் நான்கு கோபுரங்கள் வழியேயும் அனுமதி அளிப்பது, தரிசனத்தின் போது வீதியுலா செல்லும் பஞ்சமூர்த்திகள் கோயிலை வந்தடைந்தவுடன் கீழ கோபுர வாயில் வழியே பக்தர்கள் செல்ல அனுமதிப்பதில்லை எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.