தஞ்சை, டிச.12:தஞ்சை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த மாணவி விமலா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சை தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்தவுடன் பழைய பஸ்ஸ்டாண்ட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது தஞ்சை சீனிவாசபுரம் சேப்பனவாரி முனியாண்டவர் கோயில் முதல் தெருவை சேர்ந்த பெயிண்டர் அந்தோணிராஜ் (21) வந்து அந்த மாணவியிடம் நான் உன்னிடம் என்னை காதலிக்குமாறு பலமுறை கூறியும், நீ காதலிக்க மறுக்கிறார். நீ என்னை காதலிக்கவில்லை என்றால் நான் மறைத்து வைத்துள்ள ஆசிட் பாட்டிலை எடுத்து உன் மேல் ஊற்றிவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் தான் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த மாணவியை தாக்க முயற்சி செய்தார். இதனால் அந்த மாணவி பயந்து சத்தம் போட்டார். இதை பார்த்த அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் ஒன்று கூடி அந்த வாலிபரை பிடித்து அருகில் இருந்த காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வாலிபரை தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் தஞ்சை கிழக்கு போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து வாலிபரை கைது செய்தனர்.