திருச்சி, டிச. 12: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் 2வது கட்டமாக கும்பாபிஷேகம் இன்று (12ம் தேதி) நடக்கிறது. முன்னதாக கோயிலில் உள்ள பரிவார சன்னதிகளுக்கு 9ம் தேதி முதல்கட்டமாக கும்பாபிஷேகம் நடந்தது. 2வது கட்ட கும்்பாபிஷேக விழாவில் கலந்து ெகாள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் இரவு 8.10 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருவானைக்கோயில் சென்றார். இரவு 8.27க்கு சுந்தர கோபுரம் வழியாக கோயில் உள்ளே சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்து சமய அறிநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயப்பிரியா வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர், யாகசாலை பூஜை நடக்கும் இடத்திற்கு சென்று யாகசாலை பூஜையில் பங்கேற்றார். பின்னர் பூஜைகள் முடிந்தவுடன், கவர்னருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவருடன் கலெக்டர் ராஜாமணி உடனிருந்தார்.