திருச்சி, டிச.12: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து 4ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.ரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 7ம்தேதி வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவம் துவங்கியது. விழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் ரத்ன அபயஹ ஸ்தம், மகாலட்சுமி பதக்கம், தங்க காசு மாலை, பவளமணி மாலை, 18 ஆரமுத்தாரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுண மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அதன்பின், காலை 7.45 மணி முதல் மதியம் 12 மணி வரை அரையர் சேவையாக பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.