கிருஷ்ணகிரி, டிச.12: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று திமுக எம்எல்ஏக்கள் தளி பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம்.
எங்களது பணிகளை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வுகள் செய்தும், எங்களது குறைகளை நிவர்த்தி செய்தும் வருகின்றனர். இந்நிலையில், எங்கள் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இத்திட்டம் நிறுத்த உள்ளதாகவும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், திட்டத்தை நிறுத்த கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.