ஈரோடு, டிச. 12: மதுபழக்கத்தை கைவிட முடியாததால் பெண் ஒருவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் பிலியம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் லோகநாயகி (19). லோகநாயகி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிலியம்பாளையம் மாரியப்பநாடார் வீதியில் வசித்து வந்தனர். லோகநாயகிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தியும், லோகநாயகியின் தாயார் ரங்கம்மாளும் கண்டித்துள்ளனர். ஆனால் மது பழக்கத்தை விட முடியாமல் லோகநாயகி இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு 8 மணிக்கு லோகநாயகி மது அருந்திய நிலையில் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த லோகநாயகியின் அண்ணன் மூர்த்தி கண்டித்துள்ளார். அடுத்த நாள் கார்த்தி ஆடு மேய்க்க சென்று விட்டு இரவு கார்த்தியும், ரங்கம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு கட்டிலில் லோகநாயகி வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லோகநாயகி உயிரிழந்தார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடிப்பழக்கத்தை விட முடியாமல் தவித்து வந்த லோகநாயகி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.