சத்தியமங்கலம், டிச. 12: சத்தியமங்கலம் அடுத்த கெத்தேசால் மலைகிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என கிரமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கெத்தேசால் மலைகிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. படிப்பறிவில்லாத இக்கிராம மக்கள் மானவாரியாக ராகி, மக்காசோளம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுவதும், வனப்பகுதியில் உள்ள சீமார்புல், தேன், கடுக்காய் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 30 ஆண்டுக்கு முன்பு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கான்கிரீட் கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.