கொடுமுடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை

கொடுமுடி, டிச. 12:  கொடுமுடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த சிட்டப்புள்ளாபாளையம் செம்மங்குட்டைப்புதூரை சேர்ந்தவர் முத்துச்சாமி (78). விவசாயி. இவரது மனைவி அருக்காணியம்மாள் (74). வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திலகவதி (50), செல்வி(45) என்ற இருமகள் உள்ளனர்.

இளையமகள் செல்வியின் கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டதால் செல்வியின் வீட்டில் முத்துச்சாமி வசித்து வருகிறார். அருக்காணி செம்மங்குட்டைப்புதூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அருக்காணியம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் அருக்காணியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொடுமுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: