அணைக்கட்டு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த காமுகனுக்கு 10 ஆண்டு சிறை வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர், டிச.12: அணைக்கட்டு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அந்த கிராமத்தில் திருவிழா நடந்தது. மாலை 6 மணியளவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அவளது பெற்றோர் கடைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது எதிர் வீட்டில் வசித்து வந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார்(20), சிறுமியை பைக்கில் அமர வைத்து கடைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக்கொடுத்து பைக்கில் சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள மாங்காய் தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பதறியடித்து ஓடிவந்த பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: