ஹெல்மெட் ஆசாமிகள் துணிகரம் கணவருடன் பைக்கில் சென்ற மனைவியிடம் 12 சவரன் பறிப்பு காட்பாடியில் பைக் ஆசாமிகள் கைவரிசை

வேலூர், டிச.12: காட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற மனைவியிடம் ஹெல்மெட் ஆசாமிகள் 12 சவரன் செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். காட்பாடி சில்க்மில் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவர் சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே சூப்பர் மார்க்கெட் கடை வைத்துள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் கடையை பூட்டிவிட்டு தனது மனைவி சாந்தியுடன் வீட்டிற்கு பைக்கில் சென்றார். திருநகர் அருகே சென்றபோது பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஹெல்மெட் ஆசாமிகள் திடீரென சத்தியநாராயணன் பைக் மீது மோதி உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது திடீரென பைக் ஆசாமிகள் சாந்தி அணிந்து இருந்த 12 சவரன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கூச்சலிட்டனர். இருப்பினும் அவர்கள் தப்பிவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆசிரியையிடம் செயின்பறிப்பு, வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: