×

டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை, டிச. 12: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், சிவசங்கரன் நகரில் வசித்து வருபவர் கங்கா (எ) சுரேஷ் (35). சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். மணல் விற்பனையும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு பைக்கில் வந்த 3 பேர், மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை, சுரேஷ் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பினர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்கவே, அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்ததில் சுரேஷ் வீட்டின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

குண்டு வீசப்பட்ட நேரம், அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அவசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டு வெடித்த இடத்தை சோதனை செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த தீபாவளி அன்று அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் சுரேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்துள்ளது. இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அவரை பழிவாங்குவதற்காக பெட்ரோல் குண்டு வீசினரா அல்லது தொழில் போட்டி காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Transporter ,home ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு