×

ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து : பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

திருவள்ளூர், டிச. 12: திருவள்ளூர் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், 4 பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், 2 பேர் ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். திருவள்ளூரில் இருந்து புல்லரம்பாக்கம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று 5 பயணிகளுடன் நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்டது. ஆட்டோவை புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் விஜி ஓட்டினார். சிறுவானூர் பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது, ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில், ஷேர் ஆட்டோ முன்புறம் நசுங்கியது. மேலும், அதில் பயணித்த புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராபின் ராஜ்குமார்(40), ஆபேஷ்(23), சேகர்(20), விஜயா(53), சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி பிரீத்தி(12), ஆட்டோ டிரைவர் விஜி(40), கார் டிரைவரான ஊத்துக்கோட்டை சிவசங்கர்(37), அதில் பயணித்த குருசாமி(60), அவரது மருமகள் சித்ராதேவி(40), அபிநயா பாவனா(18) ஆகிய 10 பேர் படுகாயங்களுடன் அலறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆபேஷ், சேகர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...