வானூர், டிச. 12: வானூர் தாலுகா நைனார்பாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மின்மாற்றியில் இருந்து செல்லும் தாழ்வழுத்த மின் கம்பி கடந்த நில நாட்களுக்கு முன் காற்றில் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலமுறை மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் அதனை சரிசெய்யாமல் அப்படியே கிடந்தது. இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக வானூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக சென்று அறுந்து கிடந்த மின்கம்பியை சீர் செய்தனர். இதனால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் அச்சமின்றி செல்ல முடிகிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.