நாகர்கோவில், டிச.12 : சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய பா.ஜ.வினர் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவனந்தபுரத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையொட்டி பஸ் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய தமிழ்நாடு அரசு பஸ்கள் களியக்காவிளை வரை மட்டுமே சென்று திரும்பின. இதே போல் திருவனந்தபுரத்தில் இருந்தும் கேரள அரசு பஸ்கள் நாகர்கோவில் வர வில்லை. கேரளா செல்ல வேண்டிய தனியார் வாகனங்கள், லாரிகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை, மார்த்தாண்டம் மற்றும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் புறப்பட்டு சென்றன. திருவனந்தபுரத்துக்கு பஸ்கள் செல்லாததால், ரயில்களில் அதிகளவில் கூட்டம் இருந்தது.
அரசு பஸ் மீது திடீர் கல்வீச்சுகன்னியாகுமரியில் இருந்து மார்த்தாண்டத்துக்கு நேற்று முன் தினம் இரவு தமிழ்நாடு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. ராணித்தோட்டம் பணிமனை அருகில் சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் பஸ்சை வழி மறித்து முன் பக்க கண்ணாடியில் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் மீது கல்வீச்சுக்கான காரணம் தெரிய வில்லை. பஸ் டிரைவர், தங்களது பைக்கை முந்தி சென்ற ஆத்திரத்தில் இவர்கள் பஸ் மீது கல்வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆசாரிபள்ளம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.