திருச்செந்தூரில் வாகனம் மோதி தபால் ஊழியர் பலி

திருச்செந்தூர், டிச.11: மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (50). குலசேகரன்பட்டினம் தபால்நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மகளுக்கு திருமணமாகி மருமகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகள், தந்தையுடன் காயாமொழியில் வசித்து வருகிறார். மகன் திருச்செந்தூர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.  குலசேகரன்பட்டினம் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய நாகலிங்கத்திற்கு அவர் குடியிருக்கும் காயாமொழிக்கு பணி மாறுதல் கிடைத்து நேற்று அங்கு அவர் பணியில் சேர வேண்டும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் காயாமொழியில் இருந்து திருச்செந்தூருக்கு டீ குடிக்க பைக்கில் வந்தார். அப்போது கல்லூரி முன்பு வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நாகலிங்கம் இறந்தார். தகவலறிந்த திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி நாகலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: