கரூர், டிச. 11: கரூர் மாவட்டம் மண்மங்கலம் பண்டுதக்காரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வரும் 24ம் தேதி (திங்கள்) கரூர் கோவைசாலை கொங்கு திருமண மண்டபத்தில் தேசிய விவசாயிகள் தின விழாவையொட்டி, கால்நடை மற்றும் கோழி பண்ணையாளர்கள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு கறவை மாடு, ஆடு, கோழி வளர்ப்பு, தீவன பயிர் உற்பத்தி தொழில்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் சவால்கள் பற்றியும் தொழிலை லாபகரமாக நடத்துவதற்கு தேவையான பயிற்சிகள் பற்றியும் தெரிவிக்கலாம்.
கருத்தரங்கில் கால்நடை வளர்ப்போர் அளிக்கும் ஆலோசனைகள் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள் வடிவமைத்தல் மற்றும் செயலாக்கம் உத்தேசிக்கப்பட உள்ளது. எனவே கருத்தரங்கில் கரூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர் பெருமளவில் கலந்து கொண்டு கால்நடை வளர்ப்பில் உள்ள பிரச்னைகளையும், விவசாயிகள் எதிர்பார்க்கும் தேவைகளையும் தெரிவிக்கலாம். விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் அலுவலக தொலைபேசி 04324 294335, அலைபேசி 73390 57073 குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருகை தரும் 100 விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.