×

சிறையில் மேலும் 18 கைதிகள் மயக்கம்

புதுச்சேரி, டிச. 11: புதுவை சிறையில் 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள கைதிகளில் மேலும் 18 பேர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தண்டனை கைதிகள் விண்ணப்பிக்கும் மனுக்களை பரிசீலித்து சிறை நிர்வாகத்தால் பரோல் வழங்கி வருகிறது. புதுவையில் 4 மாதங்களுக்கு முன்பு பரோல் கேட்டு விண்ணப்பித்த தண்டனை கைதிகளின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை கண்டித்து சிறையில் தண்டனை கைதிகளில் பெரும்பாலானோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உண்ணாவிரதம் நேற்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இதுவரை சிறைத்துறை உயர் அதிகாரிகள் கைதிகளிடம் எந்தவொரு சமரச பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் 5 கைதிகள் வரை மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த நிலையில் மேலும் 18 தண்டனை கைதிகள் உடல்நிலை சோர்வடைந்த நிலையில் அவர்களுக்கு சிறையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 தற்போது அரசு மருத்துவமனையில் தண்டனை கைதிகள் மதன் (33), பார்த்தசாரதி (28), அமலன் என்ற லூர்துராஜ் (31), ஷேக் முகமது (37), இருசப்பன் (46), நாராயணன் (35), சிவசங்கர் (39), அண்ணாமலை (40), சுந்தரவேலு (31) உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று சிறை திரும்பி வருகின்றனர். இதையொட்டி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளில் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளிடம் சிறை உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Tags : prisoners ,prison ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...