புதுச்சேரி, டிச. 11: புதுவையில் கைதிகளுக்கு பரோல் வழங்க மறுப்பதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மற்றும் சமூக அமைப்பினரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். புதுவை காலாப்பட்டு மத்திய சிறைச் சாலையில் தண்டனை கைதிகள் பரோல் வழங்க மறுப்பதை கண்டித்து தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே சிறை கைதிகளுக்கு பரோல் வழங்காத சிறைத்துறை ஐஜியை கண்டித்தும், சிறையில் கைதிகள் மீது நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவர்னரும், முதல்வரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
நேருவீதி- அண்ணா சாலை சந்திப்பில் நடைபெற்ற மறியலுக்கு திராவிட விடுதலைக் கழக லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், தமிழர் களம் அழகர், தந்தை பெரியார் திக வீரமோகன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன் மற்றும் இளைஞரணி அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறை நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவே பெரியகடை இன்ஸ்பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 59 பேரை கைது செய்தனர். அப்போது இருதரப்புக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து லோகு.அய்யப்பன் கூறுகையில், தண்டனை கைதிகளின் பரோல் (சிறை விடுப்பு) விண்ணப்பங்களை சிறை ஐஜி பங்கஜ்குமார் ஏற்க மறுத்து வருகிறார். ேமலும் அவர்கள் பல வகைகளில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், புதுவை அரசும், கவர்னரும் தலையிட்டு கைதிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.