சிதம்பரம், டிச. 11: சிதம்பரம் 6 மற்றும் 7வது வார்டு குப்பைகளை தேக்கி வைத்து உரமாக்க வாகீசநகர் நகராட்சி பூங்கா இருந்த இடத்தில் நுண் உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகள் அதிகம் இருப்பதால் அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அங்கு நுண் உரம் செயலாக்க மையம் நடந்து வருகிறது. மையம் தொடங்கியதில் இருந்து அங்குள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகரித்து அப்பகுதி மக்கள் கடும் சுகாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் வாகீச நகரில் 6 மற்றும் 7வது வார்டு மக்கள் நலச்சங்கம் சார்பில் நுண் உரம் செயலாக்க மையத்தை மூடக்கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் லட்சுமிபதி தலைமை வகித்தார்.
செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர் சிவச்சந்திரன், பொருளாளர் அப்பர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பேசினர். பின்னர் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நுண் உரம் செயலாக்க மையத்தை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜனை சந்தித்து மனு அளித்தனர். அவர் நுண் உரம் செயலாக்க மையத்தை வந்து பார்வையிடுவதாக மக்களிடம் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.