இடைப்பாடி அருகே மயானத்தில் வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

இடைப்பாடி, டிச.11:  இடைப்பாடி அருகே மயானத்தில் வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைப்பாடி அருகே நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள மயானத்தில், நேற்று அதிகாலை 4மணியளவில் மர்மநபர்கள் 4 மாத பெண் குழந்தையை வீசி விட்டுச் சென்றனர்.  குழந்தையின் அழுகுரல் கேட்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தையை மீட்டனர். பின்னர், இது குறித்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் குழந்தை மீட்டு, சித்தூர் அரசு சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர், சேலம் அரசு காப்பகத்தில் அந்த குழந்தையை ஒப்படைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை மயானத்தில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: