×

மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருந்தாளுநர் நியமிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில், கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரியில், உலக மருந்தாளுநர் தினவிழா மற்றும் தேசிய மருந்தியல் வாரவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை மருந்தாளுநர் லட்சுமிபதி தலைமை வகித்தார். தலைமை மருந்தாளுநர்கள் சுரேஷ், கதிர்வேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பிரியாராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாநில தலைவர் சுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

 சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருந்து கிடங்கில் தலைமை மருந்தாளுநர் பணியிடம், வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களையும், ஓசூர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் தலைமை மருந்தாளுநர் பணியிடமும் உருவாக்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்களை பணி வரன்முறை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக சதானந்தம் வரவேற்றார். பெருமாள் நன்றி கூறினார்.

Tags : pharmacists ,district head hospital ,
× RELATED ₹53.39 கோடி மதிப்பீட்டில் ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை