×

தேன்கனிக்கோட்டையில் விபத்து மின்கம்பத்தில் மோதிய வேன் வீட்டுக்குள் புகுந்தது

தேன்கனிக்கோட்டை, டிச.11: தேன்கனிக்கோட்டையில், நேற்று அதிகாலை தாறுமாறாக ஓடி மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான வேன், வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து ரோஜா செடிகள் ஏற்றிச் செல்வதற்காக சரக்கு வேன் ஒன்று கோவையில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தது. தேன்கனிக்கோட்டை நேதாஜி ரோட்டில் செல்லும்போது, டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால், தாறுமாறாக ஓடிய வேன் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி, அருகிலிருந்த வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு நின்றது. பெரும் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும் அங்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் சுவரின் ஒரு பகுதி இடிந்து நாசமானது. சுவர் விழுந்த இடத்திலிருந்து சற்று தள்ளி வீட்டின் உரிமையாளர் சொம்பையா(65), அவரது மகன் வெங்கடராமப்பா, அவரது மனைவி தேவம்மா, இவர்களது மகள்கள் தேஜஸ்வினி, சத்யா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து, வேனின் கேபினில் சிக்கிக் கொண்டது. இதனால், வேகம் குறைந்து பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. வேனின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், டிரைவர் சிறுகாயங்களுடன் தப்பினார்.  தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் வேன் உரிமையாளர், ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி, சேதமடைந்த மின்கம்பம், வீட்டிற்குண்டான இழப்பீட்டை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : accident ,Dhenkanikkottai road ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...