பாப்பிரெட்டிப்பட்டி, டிச.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ‘உலக மண்வள நாள்’ கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர்(பொ) அருணன் தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் இளங்கோவன் வரவேற்று பேசினார். மேலும் அருணன் கூறுகையில், மண் மாசுபடுவதை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் டிச.5ம்தேதி உலக மண்வள நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாய மக்கள் அனைவரும் மண் பரிசோதனை செய்து, அதனடிப்படையில் தங்கள் நிலத்திற்கு தேவையான அளவு உரமிடுதல் வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடும்போது விவசாயிகள்அதிகளவு உரமிடுவதை தவிர்க்க முடியும்.
இதன் மூலம் மண்வளமும் பாதுக்காக்கப்படும். உரச்செலவும் மீதமாகும். மேலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாதவாறு பார்த்துக்கொண்டு, மண்வளத்தை விவசாயிகள் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வேளாண்த்துறை அலுவலர்களான குமரேசன், தண்டபாணி, சக்தி, சுரேஷ், சண்முகம், சக்திவேல், அசோக் ஆகியோர் செய்திருந்தனர்.