×

வீடுகளில் பதுக்கி வைத்து மது விற்பனை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்த பெண்கள்

பென்னாகரம், டிச.11: பென்னாகரம் அருகே வீடுகளில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலால் ஆவேசமடைந்த பெண்கள் சிலர், சம்மந்தப்பட்ட வீடுகளுக்குள் புகுந்து பாட்டில்களை அபகரித்து வந்தனர். அவற்றை சாலையில் போட்டு உடைத்ததை கண்டு குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் ஓரிரு டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளது. அக்ரஹாரம் அல்லது ஏரியூர் பகுதிக்கு சென்று மது அருந்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் சிலர், தர்மபுரியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி வந்து, வீடுகளில் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லிலும் பதுக்கல் மது விற்பனை ஜோராக நடக்கிறது. போலீசாரிடம் மக்கள் புகார் தெரிவித்தபோதும், மது பதுக்கல்காரர்களுக்கு உடந்தையாக அவர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 கூடுதல் விலைக்கு மதுவை பெண்களே விற்கும் போக்கால் அக்கம், பக்கத்தில் உள்ளோர் கடும் அவதிக்குள்ளாகினர். குடித்து விட்டு பெண்களை கேலி, கிண்டல் செய்வதும், சாலையில் ஆடையின்றி கிடப்பதுமாக இருப்பதை கண்டு பெண்கள் வேதனைக்குள்ளாகி வந்தனர். நேற்று பருவதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் காலனியில் வீடுகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக பென்னாகரம் போலீசில் புகார் அளித்தபோதும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், சிறுவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கோபிநாத் என்பவரது தலைமையில் திரளாக சென்றனர். அவர்கள் சம்மந்தப்பட்ட வீடுகளை முற்றுகையிட்டு, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை சாலையோரம் கற்களில் போட்டு உடைத்தனர். இதைப்பார்த்த அப்பகுதி குடிமகன்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

 இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளில் மது விற்கப்படுவதாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் விற்பனை செய்யும் வீடுகளுக்குள் புகுந்து அவற்றை பறிமுதல் செய்து அழித்தோம். இனிமேல் இதுபோன்று யாராவது வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்தால் வீடு புகுந்து பாட்டில்களை பறிமுதல் செய்வோம், என்றனர்.

Tags : Women ,houses ,road ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...