×

பழுதான மோட்டார் பல மாதமா வரல... குடிநீர் கோரி குடங்களுடன் மறியல்

குஜிலியம்பாறை, டிச. 11:  பழுதான மின்மோட்டாரை 3 மாதமாக சரிசெய்யாமல் இழுத்தடித்து வருவதை கண்டித்தும், குடிநீர் கோரியும் குஜிலியம்பாறை அருகே கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  குஜிலியம்பாறை ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்டது பிச்சனாம்பட்டி. இங்கு 35க்கும் மேற்பட்ட காலனி வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு போர்வெல் தண்ணீரை மேல்நிலை தொட்டிக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போர்வெல் மின்மோட்டார் பழுதாகி போனது. இதையடுத்து மின்மோட்டாரை கழற்றி சென்றனர். ஆனால் இதுவரை சரிசெய்து பொருத்தவில்லை. இதனால் 2 கிமீ தொலைவில் உள்ள காளபட்டி, பாரதிநகர் பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து ஆலம்பாடி ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நேற்று காளப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாளில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...