ஈரோடு, டிச. 11: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோபி அடுத்துள்ள புதுப்பாளையம் எஸ்டிஎன்., காலனி பகுதியில் மாகாளியம்மன் கோயில், கிறித்துவ தேவாலயம் மற்றும் பள்ளி ஆகியவை உள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் சென்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் மக்கள் எதிர்ப்பினை கருத்தில் கொள்ளாமல் டாஸ்மாக் நிர்வாகம் கடையை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிஎன்., பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். எதிர்ப்பை மீறி கடையை திறக்க முயன்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.