×

எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளிடம் குறைகேட்பு கூட்டம்

உத்திரமேரூர், டிச.11: எட்டுவழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் குறைகேட்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வெங்காரம், அழிசூர், சிலாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் எட்டு வழிச்சாலையில் பாதிக்கப்பட உள்ள விவசாயிகளின் குறை கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சௌந்தர், முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளை சந்தித்து வருகிறோம். இதில் பாதிக்கப்படும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து பாதிக்கப்பட உள்ள நிலங்களை பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து அரசுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். மேலும் தமிழக அரசு, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள், ஆட்சேபனை உள்ளவர்கள் 21 நாட்களுக்குள் தங்களது ஆட்சேபத்தை தெரியப்படுத்தலாம் என்று அரசானை வெளியிட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்படும் விவசாயிகளிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். உத்திரமேரூர் ஒன்றியத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருமே விவசாயத்தினை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிலங்களை கையகப்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்படும். மேலும் சேலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை செல்லும் சாலையில் 4 இடங்களில் சாலை குறுகலாக காட்சியளிக்கிறது. அவைகளை முறைப்படுத்தினாலே போதுமானது. இந்த எட்டு வழிச்சாலை அவசியமற்ற ஒன்றாகும். ஆனால், அரசே இந்த சாலைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாலை அமைக்க தீவிரம் காட்டுவது யாருக்காக என்று கேள்வி எழுப்பினர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...