×

திருக்கழுக்குன்றம், உத்திரமேரூரில் விஏஓக்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

திருக்கழுக்குன்றம், டிச.11: திருக்கழுக்குன்றத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாதி,இருப்பிடம், வருமான சான்று மற்றும் வாரிசு சான்று, கலப்பு திருமணம், பட்டா மாறுதல், விதவை, முதியோர், திருமண உதவி தொகை முதல் பட்டதாரி சான்று  என பல்வேறு சான்றிதழ்களுக்கு உரிய விசாரணை செய்து கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரைக்கின்றனர்.  இதற்காக அரசு சார்பில் இ-மையம் செயல்படுகிறது.  இந்நிலையில் இன்டர்நெட் சேவைக்கான செலவினத்தொகை வழங்க கோரியும் மாவட்ட மாறுதல், கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும்  மடிக்கணினி, கூடுதல் பணிக்கான ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம், தர்ணா போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து நேற்று முதல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்கழுக்குன்றம் கிளை சார்பில் அதன் தலைவர் செல்வமணி தலைமையில், செயலாளர் சங்கிலி பூதத்தான் முன்னிலையில் 35 கிராம நிர்வாக அலுவலர்கள், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...