×

மின்சாரம் துண்டித்து 12 வீடுகளில் கைவரிசை கொள்ளை நடந்த கிராமத்தில் போலீசார் விசாரணை

தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே கருபையனஅள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 1.30 மணிக்கு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. அதன்பின் மின்சாரம் வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அதே பகுதியில், 12 வீடுகளில் கொள்ளை நடந்தது தெரியவந்தது. கிராம மக்கள், உடனடியாக பென்னாகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதிகாலையில் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள், இருட்டை பயன்படுத்தி, 12 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், சின்னுசெட்டியார் மகன் லாரி டிரைவர் சந்தோஷ் (25) என்பவரது வீட்டில் ₹10 ஆயிரம், மஞ்சள் வியாபாரி துரை(40) என்பவரது வீட்டில் ₹10,170 ரொக்கம், முனுசாமி மகன் பொய்யாமொழி வீட்டில் ₹4 ஆயிரம், நாகேந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோரது வீடுகளில் இருந்த பித்தளை பாத்திரங்கள், கமல் என்பவரது வீட்டில் விவசாய மோட்டாருக்கு பயன்படுத்தும் காப்பர் கேபிள், அரசு பஸ் கண்டக்டரான தங்கராஜூ(40), விவசாயி பிரபு(35), செல்வம், பாக்கியராஜ், மதியழகன், நாகேந்திரன், செல்வன் ஆகியோரது வீடுகளின் கதவை உடைத்து, கையில் கிடைத்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து 12 வீடுகளின் கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று பென்னாகரம் டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் போலீசார் கொள்ளை நடத்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.



Tags : house ,houses ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்