×

நொய்யல் பகுதியில் சாயப்பட்டறை கழிவால் ஆற்றுபாசனம் இழக்கும் அபாயம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர்,டிச.7: சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆற்றுபாசனம் இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை  வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களை  கடந்து கரூர் காவிரியில் நொய்யல் ஆறுகலக்கிறது. நொய்யல் ஆற்றினால் திருப்பூர் மாவட்டம் தான் பெருமள வில் பயன்படுகிறது. திருப்பூர்  சாயப்பட்டறை கழிவுகளை ஒரத்துப்பாளையம் என்ற இடத்தில் தேக்கி வைத்து வெள்ளப்  பெருக்கு ஏற்படும் காலங்களில் திறந்து விட்டு விடுகின்றனர். இதனால்  நொய்யல் ஆறுபாசனத்தை இழந்து விட்டது. குடிநீருக்கும், கால்நடைகளுக்கும்  கூட இந்த ஆற்றுநீர் பயனின்றிப் போய் விட்டது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும்  விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மனுகொடுத்தும் ஓய்ந்து போய் விட்டனர்.  ஆனால் சாயக்கழிவுநீரை தடுக்க முடிய வில்லை.

மழைக்காலங்களில் தொடர்ந்து  சாயக்கழிவு நீரை திறந்து விடுவதால் காவிரியாற்றில் வந்து கலக்கிறது. இதனால்  காவிரி நீரும் மாசுபட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள்  கூறுகையில், திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க  அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சுற்றுச்சூழல் அமைச்சர் வரை  முறையிட்டும் எந்த பயனும் இல்லை.நொய்யல் ஆற்றை சீரமைக்கும் திட்டம் ஒன்றை  கொண்டுவந்தனர். சுமார் ரூ.13கோடி மதிப்பீட்டில் 80கிமீ துாரம் ஆற்றை  சீரமைக்க உத்தேசிக்கப்பட்டது.ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் நிதி ஆதாரத்தை  திரட்டி திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவி த்தனர். எனினும்  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. ஏற்கனவே மாநில அரசு   அளித்த பல திட்டங்களின் கோப்புகள் மத்திய அரசின் அலுவலகங்களில் துாங்கிக்  கொண்டிருக்கிறது.மத்திய , மாநில அரசுகளின் அலட்சியம் காரணமாக  நொய்யல்  ஆற்றின் கழிவு பாதிப்பை தொ டர்ந்து அனுபவித்து பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.  இனியாவது திட்டத்தை செயல்படுத்தி கழிவுநீர் பாதிப்பில் இருந்து  விவசாயத்தையும், கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றனர்.



Tags : region ,Noyyal ,livelihood loss ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!